“இதனால தான் மாநிலத் தலைவர் பதவியே கிடைத்தது”… ஒரே வார்த்தையில் மாணிக்கம் தாகூரை அலறவிட்ட திமுக… கசிந்த ரகசியம்…!

By Visaka on ஆனி 30, 2026

Spread the love

காங்கிரஸ் கட்சியின் புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் எம்பி, “திமுக எங்களை விமர்சித்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம், திருப்பி அடிப்போம்” என்று அண்மையில் திமுகவிற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். இவரின் இந்த விமர்சனம் திமுக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்திய நிலையில், தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இதற்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், திமுக தொண்டர்களின் அயராத உழைப்பும், திமுகவின் வாக்குகளும் கிடைத்ததால்தான் மாணிக்கம் தாகூர் கடந்த எம்பி தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (மார்ஜினில்) வெற்றி பெற்றார் என்றும், அந்த தகுதியை வைத்துக்கொண்டுதான் தற்போது அவர் மாநிலத் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் கூட்டணி கட்சிகளை ஆறே மாதத்தில் துரத்தியடித்த வரலாற்றைக் குறிப்பிட்ட எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்களது தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோதும் கூட்டணி கட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் மனக்கோணாமல் வழங்கியதாகக் பெருமிதத்துடன் கூறினார். தொடர்ந்து காங்கிரஸ் தரப்பை விமர்சித்த அவர், “திமுக ஒருபோதும் நன்றியை மறக்கும் கட்சி கிடையாது; ஆனால் காங்கிரஸ் கட்சியினர் நன்றியை மறந்து செயல்படுகிறார்கள், அதனால்தான் தற்போது அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் தேடிப் போகிறார்கள்” என்று மிக நேரடியாகக் குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக மீது விமர்சனங்களை முன்வைத்து வரும் கட்சிகளுக்கு திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வரும் வேளையில், இந்த இரு கட்சிகளுக்கிடையேயான வார்த்தைப் போர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.