ராஜஸ்தானில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை ஒருவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மனதை உலுக்கும் இந்த கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 45 வயது நபர், கடந்த பல ஆண்டுகளாகத் தன் குடும்பத்தினரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இவருடைய கொடுமை தாளாமல் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அந்த நபர் வேறொரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார்.
தாயின் பிரிவுக்குப் பின், 16 வயது சிறுமியும் அவளது அண்ணனும் தந்தை மற்றும் மாற்றாந்தாயுடன் வசித்து வந்தனர். ஆனால், தந்தையின் தொடர் அடி உதை மற்றும் சித்திரவதைகளைத் தாங்க முடியாமல், சிறுமியின் அண்ணனும் வீட்டை விட்டு தப்பியோடிவிட்டான். இதனால் அந்தப் பெண் முற்றிலும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டாள். இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட தந்தை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளை வலுக்கட்டாயமாகத் தன் படுக்கைக்கு அழைத்துச் சென்று, “இதை யாரிடமும் சொல்லக்கூடாது” என்று மிரட்டி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அமைதியாக இருந்தால் தப்பித்துவிடலாம் என்று நினைத்த அச்சிறுமியை, அந்த நபர் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். இந்த வன்முறை எல்லை மீறியபோது, தப்பிக்க வழியில்லாமல் தவித்த சிறுமி, துணிச்சலை வரவழைத்துக்கொண்டு தன் அத்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அத்தை, சற்றும் தாமதிக்காமல் கடந்த ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி சிறுமியைப் பால்டா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார். அதனடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்தப் பாசறை மிருகம் உடனடியாகக் கைது செய்யப்பட்டது.
இவ்வழக்கு கோட்டாவில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் குமார் பட்நாகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் திபேஷ் பார்கவ் வலுவான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். விசாரணையின் போது 14 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, 27 முக்கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
