சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ‘ரோட் சேஃப்டி வாலா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த 32 வயதான குர்மன் சிங் என்பவரை டெல்லி காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. சாலையில் செல்லும் பெண்களையும், சிறுமிகளையும் மட்டுமே குறிவைத்து, அவர்களின் வாகனங்கள் மீது வேண்டுமென்றே மோதிவிட்டு, பின்னர் அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றுவதை இவர் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார்.
கடந்த ஜூன் 2ஆம் தேதி டெல்லி காவல்துறைக்கு வந்த ஒரு புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகார்தாரரின் மைனர் மகள் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டி பைக்கை, அடையாளம் தெரியாத இருவர் காரில் வந்து பின்னால் இருந்து மோதியுள்ளனர். அதோடு நிறுத்தாமல், அச்சிறுமியைத் துரத்திச் சென்று தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியுள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு, தனது மகள் சாலையில் அச்சுறுத்தப்பட்ட அந்த வீடியோ யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். மைனர் சிறுமி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
https://twitter.com/DelhiPolice/status/2070508630668189789/video/1
காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட குர்மன் சிங்கின் சமூக ஊடகக் கணக்குகளை விரிவாக ஆய்வு செய்தபோது, அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளிவந்தன. அவரது சேனலில் உள்ள பெரும்பாலான வீடியோக்கள் பெண்களையும் சிறுமிகளையும் மட்டுமே இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியோடு குர்மன் சிங்கை கைது செய்த போலீசாரின் விசாரணையில், சமூக ஊடகங்களில் ‘வியூஸ்’ மற்றும் வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், பெண் ஓட்டுநர்களை வேண்டுமென்றே குறிவைத்து இத்தகைய வீடியோக்களை உருவாக்குவது தனக்கு ஒருவித தனிப்பட்ட திருப்தியை அளித்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சாலையில் தனியாகச் செல்லும் பெண் ஓட்டுநர்கள் மற்றும் சிறுமிகளை அடையாளம் காணும் குர்மன் சிங், அவர்கள் மீது வேண்டுமென்றே தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்துகிறார். விபத்து நடந்தவுடன், பொதுமக்களுக்கு தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, உடனடியாக ‘சாரி அக்கா’ (மன்னிக்கவும் அக்கா) என்று கூறி நாடகமாடி மன்னிப்புக் கேட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் ரகசியமாக வீடியோவாகப் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் அனுமதியின்றி இணையத்தில் பதிவிட்டு வந்துள்ளார். தற்போது குர்மன் சிங்கிடமிருந்து வீடியோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்துள்ள டெல்லி காவல்துறை, இந்த வழக்கில் மேலதிக விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
