தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சரே நேரடியாகப் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கவும் காவல்துறைக்குத் தனிப் பிரிவுகள் அமைக்கும் கோப்புகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், ஒருபுறம் அரசு போதைக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடி வரும் நிலையில், மறுபுறம் தவெகவின் உட்கட்சி அரசியல் நகர்வுகள் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் மகனும், தமிழ்நாட்டின் முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனமான “அக்கார்ட் டிஸ்டில்லரீஸ்” அமைப்பை நிர்வகித்து வருபவருமான ஜே. சந்தீப் ஆனந்த், தவெகவில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் சாதாரண உறுப்பினராக அல்லாமல், கட்சியின் மிக முக்கியப் பிரிவான இளைஞரணியின் தலைவர் பதவியைத் தனக்கு வழங்க வேண்டும் என்று அவர் தவெக தலைமையிடம் கோரிக்கை விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு முக்கிய மது விநியோகஸ்தராக இருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் கட்சிக்குள் நுழைவது, முதலமைச்சரின் போதை ஒழிப்பு கொள்கைக்கே முரணாக அமையும் எனப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தத் திடீர் நகர்வு தவெகவின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. “கட்சிக்காக எவ்வித உழைப்பையும் செலுத்தாமல், அரசியல் அனுபவமே இல்லாத ஒருவருக்கு நேரடியாக மாநில அளவிலான பெரிய பொறுப்பை வழங்குவது எந்த வகையில் நியாயம்?” என்று உட்கட்சியினரே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். போதை அரக்கனை ஒழிக்கும் தூய சக்தியாகத் தன்னைக் காட்டி வரும் தவெக, பண பலத்திற்காக இதுபோன்ற மதுபான வியாபாரத் தொடர்புடைய நபர்களுக்குப் பதவி வழங்கினால், அது கட்சியின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்றும், கட்சி தீய சக்திகளின் கூடாரமாக மாறிவிடும் என்றும் மூத்த நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே தவெக நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து பல்வேறு சட்டப் பஞ்சாயத்துகளில் மற்றும் வழக்குகளில் சிக்கி வருவது தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ள சூழலில், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் அடுத்த வாரம் தவெகவில் இணைய உள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் தொண்டர்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளன. கொள்கை வேறு, அரசியல் வேறு என்று தவெக தலைமை சமரசம் செய்துகொள்ளப் போகிறதா, அல்லது தங்களின் தூய அரசியல் முழக்கத்தைக் காப்பாற்ற இந்த விவகாரங்களில் முதலமைச்சர் விஜய் தீர்க்கமான முடிவு எடுக்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
