“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் மாநிலத் தலைமைக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு புகார்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் ஊடகங்களிடம் மனம் திறந்து விரிவாகப் பேசப் போவதாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை செல்வப்பெருந்தகை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த செல்வப்பெருந்தகை, இந்த சந்திப்பு திடீரென நடந்தது அல்ல என்றும், தேசியத் தலைவரை வழக்கமாகச் சந்திக்கும் ஒரு நிகழ்வுதான் என்றும் கூறினார். மேலும், தான் மாநிலத் தலைவர் பதவியேற்று 6 அல்லது 7 மாதங்களே ஆகும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஏற்பட்ட சில கசப்புணர்வுகள் மற்றும் சக நிர்வாகிகளின் புரிதலற்ற பேச்சுகளால் அதிருப்தி அடைந்து, இப்பதவியில் நீடிக்க விரும்பவில்லை என டெல்லி தலைமையிடம் ஏற்கனவே கூறிவிட்டதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

   

ஏப்ரல் முதல் வாரத்திலேயே தான் இந்த முடிவை எடுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட செல்வப்பெருந்தகை, “மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் நான் மாநிலத் தலைவராகத் தொடர வாய்ப்பில்லை என்றும், வேறொருவர் அந்தப் பணியை மேற்கொள்வார் என்றும் தலைமையிடம் தெரிவித்துவிட்டேன்” என்றார். தனது பதவி விலகல் கோரிக்கை குறித்துப் பரிசீலிப்பதாகக் கூறிய மல்லிகார்ஜுன கார்கே, தற்காலிகமாகப் பொறுமையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், விரைவில் கட்சித் தலைமை தன்னை இந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கும் என முழுமையாக நம்புவதாகவும் அவர் கூறினார்.

   

மறுபுறம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில், செல்வப்பெருந்தகை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோரைக் குறிவைத்து மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகளும், ‘சர்வே’ என்ற பெயரில் பெரும் ஊழலும் நடந்துள்ளதாக அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார். தகுதியானவர்களையும், நீண்டகாலம் உழைத்தவர்களையும் புறக்கணித்துவிட்டு, புதியவர்களுக்கும் வெற்றி வாய்ப்பில்லாதவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டதால், கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும், தவறு செய்தவர்களைக் காப்பாற்றாமல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூலம் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், கட்சிக்குள் செய்யப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தம் தமிழ்நாட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி எவ்வித சமரசமும் இன்றிப் போராடி வரும் வேளையில், கட்சிக்குள் நடக்கும் இதுபோன்ற தவறுகள் தொண்டர்களின் நம்பிக்கையைக் குலைப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரங்கள் தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், செல்வப்பெருந்தகை அளிக்கப்போகும் விரிவான விளக்கம் அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.