பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அபய் குமார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை பார்த்து வந்த இவருக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திவிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் குடும்பத்தினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதியினர் ஜெய்ப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். ஆனால், இவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கை நீடிக்கவில்லை.
ஜெய்ப்பூரில் வசித்து வந்தபோது, திவிஷாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய கள்ள உறவாக மாறியுள்ளது. கணவருக்குத் தெரியாமல் பழகி வந்த திவிஷா, ஒரு கட்டத்தில் தனது கள்ளக்காதலனை ‘சொந்த உறவினர்’ என்று கணவர் அபய் குமாரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால், அபய் குமார் வேலைக்குச் சென்ற நேரத்திலும், வீட்டில் இருக்கும் சமயங்களிலும் அந்த நபர் அடிக்கடி வீட்டிற்கு வந்து திவிஷாவுடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார்.
நாட்கள் செல்லச் செல்ல, மனைவியும் அந்த நபரும் பழகும் விதம் அபய் குமாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் மனைவியின் நடத்தையை அவர் ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினார். இதற்கிடையில், திவிஷா தனது தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். வீட்டில் அபய் குமார் தனியாக இருந்த நேரத்தில், அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வந்தது. அதில், திவிஷா தனது கள்ளக்காதலனுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்தன. இதைப் பார்த்த அபய் குமார் சொல்லொணா மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்த அபய் குமார், உடனடியாக ஜெய்ப்பூரில் இருந்து பீகாரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்று குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்கியுள்ளார். எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை காலை யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய அவர், வேகமாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அபய் குமாரின் அறையிலிருந்து ஒரு தற்கொலை கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், “என் மனைவி வேறொருவனுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதால் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன்; என் மரணத்திற்கு அவள் மட்டுமே காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
