80, 90-களில் தொடங்கி ‘பருத்திவீரன்’, ‘கோலமாவு கோகிலா’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் சரவணன். இவருக்கு சூர்யஸ்ரீ என்ற முதல் மனைவியும், ஸ்ரீதேவி என்ற இரண்டாவது மனைவியும் உள்ளனர். கடந்த 2003-ஆம் ஆண்டு சூர்யஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்ட சரவணனுக்கு, நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக, முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமலேயே கடந்த 2019-ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்பவரை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
தொடக்கத்தில் எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல், சென்னை மாங்காடு அருகே உள்ள மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு மனைவிகளுடனும் சரவணன் ஒன்றாக வசித்து வந்தார். ஒரே குடியிருப்பில் தனித்தனி வீடுகளில் இவர்கள் வாழ்ந்து வந்த சூழலில், இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நடிகர் சரவணனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ சென்னை மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தனக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்ததன் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி தனது வீட்டின் முன்பாகக் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருந்ததாக சூர்யஸ்ரீ தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தனது அனுமதி எதையும் பெறாமல் நடிகர் சரவணன் சில ஆட்களை வைத்து அந்த கேமராவை வலுக்கட்டாயமாக அகற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் கணவர் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சூர்யஸ்ரீ அந்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
