பிகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் ஜூன் 11 அன்று நள்ளிரவில் கழிப்பறையைப் பயன்படுத்த வீட்டை விட்டு வெளியே வந்த ஒரு பெண், ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கைகால்களைக் கட்டி, வாயை அடைத்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்ற சமூக விரோதிகள், அவரது கணவர் தேட முடியாதபடி வீட்டை வெளியிலிருந்தும் பூட்டியுள்ளனர். கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண் ஜூன் 12 அன்று பெகுசராய் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதற்கட்ட சிகிச்சைக்குப் பின் அன்றே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சூரஜ் குமார், ராமு மாத்தோ, நிதீஷ் மாத்தோ மற்றும் அடையாளம் தெரியாத இருவர் மீது அன்றைய தினமே வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் அந்தப் பெண்ணுக்குத் தொடர்ச்சியாகக் கடுமையான வலி இருந்து வந்துள்ளது. வலி தாங்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்ததால், அவர் புதன்கிழமை மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது அந்தரங்க உறுப்புகளிலிருந்து ஒரு தோட்டா, ஒரு கூழாங்கல் மற்றும் ஒரு மரத்துண்டு ஆகியவற்றை மருத்துவர்கள் மீட்டெடுத்தனர். சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு கண்டறியப்பட்ட இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை, பெரும் சீற்றத்தையும் ஒட்டுமொத்த காவல்துறையினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பும் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கொடூரமான இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, மூத்த காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர். தேடுதல் நடவடிக்கையின்போது தோட்டாக்கூடு உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதை பெகுசராய் சதர் எஸ்.டி.பி.ஓ ஆனந்த் குமார் பாண்டே உறுதிப்படுத்தியுள்ளார். குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம் சாட்டியுள்ள நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்யத் தீவிர சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், தடயவியல் மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
