நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள சமூக ஊடகங்கள், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் அடிமையாக்கியுள்ளன. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காகக் குழந்தைகளின் கைகளுக்குச் சென்ற ஸ்மார்ட்போன்கள், தற்போது அவர்களின் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிறுவர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, மலேசியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளும் சமூக வலைதளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தப் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து, 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளச் செயலிகளைப் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்த அதிரடித் தீர்மானத்தின்படி, 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் சமூக வலைதளக் கணக்குகளைத் தீவிரமாகக் கண்காணித்து, அவற்றை உடனடியாக முடக்குவதற்கும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரபு நாடுகளிலேயே இத்தகைய கடுமையான தடையை அமல்படுத்தும் முதல் நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது.
இந்த உத்தரவின் கீழ், 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேளையில், 15 முதல் 16 வயதுடைய பதின்ம வயதினருக்குச் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது, வயதுக்கு ஏற்ற கட்டுப்பாடுகள், முகம் தெரியாத புதிய நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுத்தல், ஸ்கிரீன் டைம் மேலாண்மைக் கருவிகள் மற்றும் பெற்றோரின் நேரடி மேற்பார்வை போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை முறைப்படி பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
