டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த பணிப்பெண்ணை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்மணி 45 வயதான மீனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் ரத்த வெள்ளத்தில் மொட்டை மாடியில் கிடப்பதாகக் காவல்துறைக்குக் காலை 11:36 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்.
இக்கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக 50 வயதான மருத்துவர் மணீஷ் குப்தா என்பவரைப் போலீசார் சம்பவ இடத்திலேயே பிடித்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முதலில் அவர் அந்தப் பெண்ணைப் பேட்டால் தாக்கியதாகவும், பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதோடு, தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆதாரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாகத் தனது வீட்டில் நம்பிக்கையுடன் வேலை செய்து வந்த பணிப்பெண்ணை, அந்த மருத்துவர் ஏன் இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்தார் என்பதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்து அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
