கேரளாவில் கேஎஸ்ஆர்டிசி பேருந்தின் இலவசப் பயணச் சேவையைத் தொடங்கி வைத்த போது, அம்மாநில அமைச்சர் பிந்து கிருஷ்ணாவின் தலையில் எதிர்பாராதவிதமாகச் சூடான பாயசம் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் கேஎஸ்ஆர்டிசி பணிமனையில் பெண்களுக்கான ‘பிரியதர்ஷினி’ இலவச பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சர், பின்னர் அந்தப் பேருந்திலேயே பயணம் மேற்கொண்டார்.
அப்போது, யூத் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தலைமையில் பேருந்துக்குள் இருந்த பயணிகளுக்கும் தொண்டர்களுக்கும் பாயசம் விநியோகம் செய்யப்பட்டது. பேருந்திற்குள் யூடிஎப் தொண்டர்கள் மற்றும் பயணிகள் அதிக அளவில் திரண்டிருந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலின் காரணமாகப் பாயசம் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் நிலைதடுமாறி, எதிர்பாராதவிதமாக அப்படியே அமைச்சர் பிந்து கிருஷ்ணாவின் தலையில் கவிழ்ந்தது.
https://twitter.com/NewsTamilTV24x7/status/2066479120192831503/video/1
பாயசம் கொட்டியதைத் தொடர்ந்து, அமைச்சருடன் இருந்தவர்கள் உடனடியாகத் துணிகள் மற்றும் ஷாலைக் கொண்டு அவரது முகம் மற்றும் தலையைத் துடைத்துச் சுத்தம் செய்தனர். இந்த விபத்தில் அமைச்சருக்கு எவ்வித தீக்காயங்களோ அல்லது உடல்நலப் பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும், அவர் தனது பேருந்து பயணத்தைத் தொடர்ந்து முடித்துவிட்டுத் திரும்பினார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலால் தற்செயலாக இந்த விபத்து நடந்ததே தவிர, இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்று கட்சித் தொண்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
