சேலம் மாநகராட்சி சூரமங்கலம் 1-வது வார்டுக்குட்பட்ட ஜாகிர் பெரிய மோட்டூர் பகுதியில் செயல்படும் ரேஷன் கடையில், தான் ஒரு தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகி எனக் கூறிக்கொண்டு மணிகண்டன் (40) என்ற நபர் மாதாந்திர மாமூலாக 3,000 ரூபாய் கேட்டு அங்கிருந்த பெண் ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர் அளித்த தகவலின் பேரில், சுற்றியிருந்த பொதுமக்கள் அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து மொய்த்துக் கேள்வி எழுப்பினர். பின்னர் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவியது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் சேலம் மாவட்டம் புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் காளியம்மன் கோவில் அருகிலேயே மளிகை கடை நடத்தி வரும் நடிகர் விஜய்யின் தவெக கட்சி நிர்வாகி மணிகண்டன் என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மாமூல் விவகாரத்தில் மேலிட உத்தரவு மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவர் மீது காவல்துறை தரப்பில் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
