சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முந்தைய திமுக அரசின் கோரிக்கைகளையும், சாதனைகளையும், கொள்கை விளக்கக் குறிப்பையும் தான் முதல்வர் விஜய் அப்படியே பேசி இருக்கிறார் என்று குற்றம் சாட்டிய அவர், “தீர்ந்து போன சக்தியிடமே திருடுகிறவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார்” எனச் சாடினார்.
முன்பு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தான் டெல்லி சென்றபோது, பாஜக காலில் விழுந்து மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக விஜய் விமர்சித்ததைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தற்பொழுது கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கவே விஜய் டெல்லிக்குச் சென்றாரா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் ‘ஷாப்பிங்’ செய்வதாகவும், பிற மாநிலங்களில் பாஜக செய்வதை ஜெராக்ஸ் காப்பி போல விஜய் தமிழகத்தில் செய்து வருவதாகவும், ஆட்சி நிர்வாகம் ஒன்றும் சினிமா இல்லை என்றும் அவர் கடுமையாக வறுத்தெடுத்தார்.
இதே கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கைதாங்கலாக அறிவாலயத்திற்கு வந்த பொழுது, அவரை வரவேற்க அங்கு ஒரு நிர்வாகியும் வரவில்லை. இதனால் பெரும் விரக்தி அடைந்த துரைமுருகன், வந்த வழியே உடனே திரும்பிப் போய் விட்டார் என்றும், காரில் ஏறி புறப்படும்போது “கூட்டம் அதிகமாக இருக்கிறது; எனக்கு தொற்று ஏற்பட்டு விடும்” எனத் தன் ஆதரவாளர்களிடம் கூறிவிட்டுச் சென்றதாகவும் இந்த நிகழ்வின் பின்னணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
