மும்பையிலுள்ள புகழ்பெற்ற ‘கேஎம்’ அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் செஜல் பவார், அந்த மருத்துவமனையின் சூழல் மற்றும் வசதிகள் குறித்துக் கடுமையான சொற்களால் விமர்சிக்கும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே, சடலங்களைக் கீறிப் பார்ப்பது குறித்து அவர் பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த புதிய வீடியோ தற்போதைய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், கேஎம் மருத்துவமனையை “அசிங்கமானது, நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் தரம் குறைந்த ஒரு இடம்” என்று மருத்துவர் செஜல் பவார் வர்ணித்துள்ளார். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் எந்நேரமும் எரிச்சலுடனும், மோசமான மனநிலையிலும் இருப்பதாகவும், நோயாளிகளிடம் கூட அவர்கள் கனிவாக நடந்துகொள்வதில்லை என்றும் அவர் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பொதுமக்களும் நெட்டிசன்களும் தங்களது கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த செலவில் மருத்துவச் சேவை வழங்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு மருத்துவமனையை, அங்கு பணிபுரியும் ஒரு மருத்துவரே இப்படித் தரம் தாழ்த்திப் பேசியிருப்பது முற்றிலும் பொறுப்பற்றத்தனம் என்று பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
