விஜய் தொலைக்காட்சியின் “பாரதி கண்ணம்மா” சீரியல் மூலம் பிரபலமான நடிகை பரீனா அசாத், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆடைத் தேர்வு மற்றும் வளர்ப்பு முறை குறித்துப் பேசியிருந்தார். அவர், தனது ஆண் மகன் முன்பாக தான் குட்டையான ஆடைகளை அணிவதாகவும், சிறு வயதிலிருந்தே அதை அவன் இயல்பாகப் பார்த்து வளர்ந்தால், வெளியில் ஆடை அணிந்திருக்கும் மற்ற பெண்களையும் சாதாரணமாகப் பார்ப்பான் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒரு பெண்ணின் குணத்தை அவரது ஆடையை வைத்து மதிப்பிடக்கூடாது என்பதை ஆண் பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
பரீனாவின் இந்தத் தனித்துவமான கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் ஆதரவு அளித்தாலும், மற்றொரு தரப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல சமூக ஊடக விமர்சகரான பாரிசாலன், பரீனாவின் இந்த கருத்தை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். ஆண் பிள்ளை முன்னால் அரைகுறை ஆடையுடன் இருப்பேன் என்று கூறுவது ஒரு வகையான துன்புறுத்தல் இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தனது விமர்சனத்தில், இதேபோல் ஒரு தந்தை தனது மகள் முன்னால் அரைகுறை ஆடையுடன் நடப்பேன் என்று கூறியிருந்தால் இந்நேரம் அவர் மீது சட்டம் பாய்ந்திருக்கும் என்று பாரிசாலன் சுட்டிக்காட்டியுள்ளார். அரைகுறையாக ஆடை அணிய நினைத்தால் அதைச் செய்யட்டும், ஆனால் குழந்தையை வளர்க்கிறேன் என்ற பெயரில் இப்படிப் பேசுவது முறையற்றது என்று கூறி நடிகை பரீனாவின் கூற்றை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
