சிபிஎஸ்சி ஆன்லைன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி டெண்டரில், ‘COEMPT’ என்ற தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாக விதிகள் மாற்றப்பட்டு பெரும் முறைகேடு நடத்தப்பட்டதை, சார்தக் என்ற 18 வயது இளைஞர் தனது அசாத்தியமான ஹேக்கிங் திறன் மூலம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். நாட்டின் முன்னணி ஊடகங்களோ அல்லது அனுபவம் வாய்ந்த புலனாய்வுப் பத்திரிகையாளர்களோ கூட கண்டறிய முடியாத இந்த ஊழலை, சார்தக் மற்றும் அவரது நண்பர் நிசர்க் ஆகிய இரு இளைஞர்களும் இணைந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிபிஎஸ்சி உயர் அதிகாரிகள் மீது மத்திய அரசு தற்போது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில், விடைத்தாள் முறைகேட்டைத் துணிச்சலாக வெளிக்கொண்டு வந்த இளைஞர் சார்தக்கை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் அழைத்துத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI)-யை விடவும், இந்த இளைஞர் மிக விரைவாகவும் கூர்மையாகவும் செயல்பட்டுத் தனது அசாத்திய திறனை நிரூபித்துள்ளதாக ராகுல் காந்தி வெகுவாகப் புகழ்ந்துள்ளார். அதிகார வர்க்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்ட இந்த இளைஞர்களின் செயல், நாட்டின் ஒட்டுமொத்த இளைய சமுதாயத்திற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, நாட்டின் இளைஞர்கள் சமூகப் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகள் கேட்காமல், வெறும் ரீல்ஸ் செய்து கொண்டும், பக்கோடா பொரித்துக் கொண்டும் வேலைவாய்ப்பின்றி இருக்க வேண்டும் என்றே பிரதமர் மோடி விரும்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அதற்கு மாறாக இந்த இளைஞர்கள் தங்களின் அறிவாற்றலால் மிகப்பெரிய முறைகேட்டைத் தட்டிக் கேட்டு, நாட்டின் உண்மையான இளைஞர் சக்தியையும் விழிப்புணர்வையும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்று அவர் தனது பதிவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
