பஞ்சாப் மாநிலம் மொஹாலி பெஸ்டெக் மால் அருகே செயல்பட்டு வரும் தனியார் ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ நிறுவனத்தின் அலுவலகத்தில், பார்ப்பவர் நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரக் கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த டிம்பிள் (30) என்ற இளம்பெண், அந்த அலுவலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்து எப்போதும் போல வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது முன்னாள் காதலனும், அதே அலுவலகத்தின் சக ஊழியருமான ஹர்விந்தர் சிங் மான் (34) என்பவர் திடீரென டிம்பிளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹர்விந்தர் சிங் டிம்பிளை நோக்கி பாய்ந்துள்ளார். கத்தியைக் கண்டதும் உயிருக்கு பயந்து டிம்பிள் அலுவலகத்திற்குள் இங்கும் அங்கும் ஓடியுள்ளார். ஆனால், அந்த கொடூரன் அவரை ஓட ஓட விரட்டி, கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளான். இதைத் தடுக்க முயன்ற மற்ற ஊழியர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டிய ஹர்விந்தர் சிங், டிம்பிளை ரத்த வெள்ளத்தில் சாய்த்துள்ளார்.
பின்னர், அதே கத்தியால் ஹர்விந்தர் சிங் தன்னையும் பலமுறை குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளான். அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிம்பிள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதியளித்த நிலையில், கொலையாளி ஹர்விந்தர் சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் முறிவே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
