ஹிமாச்சல பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை உள்ளூர் நபர் ஒருவர் பொது இடத்தில் தவறான முறையில் தொட்டு அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘தேவபூமி’ என்று அழைக்கப்படும் அமைதியான ஹிமாச்சல பிரதேசத்திற்கு தன் நண்பருடன் வந்த அந்த பெண், சாலையோரம் நடந்து சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இணையத்தில் பரவி வரும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், ஒரு கட்டிடத்தின் வெளியே சில இளைஞர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த வெளிநாட்டு பெண் தன் நண்பருடன் அந்த வழியாக நடந்து வரும்போது, திடீரென ஒரு நபர் முன்னேறி வந்து அந்தப் பெண்ணிடம் தவறான முறையில் அநாகரீகமாக நடந்து கொள்கிறார். இந்த எதிர்பாராத செயலால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து பயந்தாலும், எந்தவொரு வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்து செல்கிறார்.
https://twitter.com/i/status/2062539409107673317
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் கோபமும் கண்டனங்களும் எழுந்துள்ளன. இந்தியாவின் கலாச்சாரத்திற்கும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற ஒரு சில நபர்களின் தவறான செயல்கள் ஒட்டுமொத்த நாட்டின் நற்பெயரையும், பாதுகாப்பான சுற்றுலா தலம் என்ற பிம்பத்தையும் கெடுப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
