இமயமலையின் பனியால் மூடப்பட்ட உயரமான மலைப்பகுதியில், பனிச்சிறுத்தை ஒன்று யாக் மந்தையின் குட்டியை வேட்டையாட முயன்றதும், அதனிடமிருந்து தன் குட்டியைக் காப்பாற்ற தாய் யாக் ஆக்ரோஷமாகப் போராடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இமயமலையின் கடுமையான சூழலில் வாழும் யாக்குகள், பனிச்சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகளிடமிருந்து தங்கள் குட்டிகளைப் பாதுகாக்க எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடனே செயல்படுகின்றன. பொதுவாக, பனிச்சிறுத்தைகள் தனியாகவே வேட்டையாடும் குணம் கொண்டவை; அவை சரியான நேரத்திற்காகக் காத்திருந்து திடீரெனத் தாக்கக்கூடியவை. ஆனால், வலிமையும் கூர்மையான கொம்புகளும் கொண்ட பெரிய யாக்குகளைத் தாக்குவது பனிச்சிறுத்தைக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
வேட்டை விலங்குகளால் ஆபத்து நெருங்குவதை உணர்ந்தவுடன், யாக்குகள் பயந்து ஓடிவிடுவதில்லை. மாறாக, அவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து, குட்டிகளை நடுவில் நிறுத்தி ஒரு வலுவான பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகின்றன. தேவைப்பட்டால், பெரிய யாக்குகள் எதிரியை நேரடியாக நோக்கிப் பாய்ந்து தாக்கத் தயங்குவதே இல்லை. இந்த மோதலானது வெறும் வேட்டையாடி மற்றும் இரைக்கு இடையிலான போராட்டம் மட்டுமல்லாமல்; புத்திசாலித்தனம், வலிமை மற்றும் குழு ஒற்றுமை ஆகியவற்றிற்கு இடையிலான மோதலாகும். சில நேரங்களில் பனிச்சிறுத்தை வெற்றி பெற்றாலும், பல சமயங்களில் யாக் மந்தையின் துணிச்சலும் ஒற்றுமையும் பனிச்சிறுத்தையைப் பின்வாங்கச் செய்து விடுகின்றன.
https://www.instagram.com/reel/DZJKWAQiQZa/?utm_source=ig_web_button_share_sheet
வைரலாகி வரும் இந்த காணொளியிலும் பனிச்சிறுத்தை தனது குட்டிகளுக்கு உணவளிக்கும் நோக்கத்துடன்தான் வேட்டையில் இறங்கியது. ஆனால், அது யாக் குட்டியைக் குறிவைத்த போது, தாய் யாக் ஆக்ரோஷத்துடன் தனது கொம்புகளால் தாக்கி பனிச்சிறுத்தையை அங்கிருந்து விரட்டியடித்தது. இதன் மூலம் ஒருபுறம் தாய் யாக் போராடி தன் குட்டியைக் காப்பாற்றியது; மறுபுறம் பனிச்சிறுத்தை உயிர் பிழைக்கவும் தன் குட்டிகளுக்கு உணவளிக்கவும் வேட்டைக்குச் சென்று தோல்வியைத் தழுவியது. இந்த உலகில் போராட்டம் என்பது அனைத்து தரப்பு உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதையும், ‘உயிர்பிழைப்பதற்கான போராட்டமே வாழ்க்கை’ என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
