கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சுவாரசியமான சந்திப்பில், தமிழக அரசியல் வட்டாரத்தையே உலுக்கும் ஒரு தகவல் கசிந்துள்ளது. அண்ணாமலை தனது அரசியல் எதிர்காலம் குறித்து பிரதமரிடம் விவாதித்ததோடு, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்த தனது விருப்பத்தையும் தெரிவித்து விரிவாக ஆலோசித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக தமிழக பாஜகவில் அண்ணாமலை தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு அண்ணாமலையின் அணுகுமுறையே காரணம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தேசிய தலைமைக்கு புகார் அனுப்பியதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட சீட் கிடைக்கவில்லை. அதுமட்டுமன்றி, வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் போன்ற முக்கிய தலைவர்களின் தொகுதிகள் மாற்றப்பட்டதால் கட்சியின் வெற்றி வாய்ப்பு மங்கி, கடந்த தேர்தலில் இரட்டை இலக்கத்தில் இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் இந்த முறை ஒற்றை இலக்கத்திற்கு சரிந்தது அண்ணாமலையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த தோல்விகளுக்கு அண்ணாமலையே காரணம் என்று சக தலைவர்கள் பழிசுமத்தியதால், கடும் அதிருப்தியடைந்த அவர் டெல்லிக்கு விரைந்தார். அங்கு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் நிதின் நபினைச் சந்தித்து, தமிழக பாஜகவில் நடக்கும் குளறுபடிகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களைப் பட்டியலிட்டு தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். நிதின் நபின் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் அண்ணாமலை தனது முடிவில் பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எதிர்பார்த்த மாநிலங்களவை எம்பி (MP) பதவியும் கிடைக்காத விரக்தியில், அவர் கட்சியை விட்டு வெளியேறும் முடிவை எடுத்ததாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியுடனான இந்த இறுதிச் சந்திப்பில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். ஒன்று, அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அவர் தொடங்கும் புதிய இயக்கத்தை தமிழகத்தில் பாஜகவின் ‘பி டீம்’ (B-Team) போலச் செயல்பட வைக்க ஆர்எஸ்எஸ் (RSS) தலைமை அவருக்கு ஒப்புதல் அளித்திருக்கலாம். அல்லது, அவருக்குப் பெரிய அளவில் ஏதேனும் மத்தியப் பதவி தருவதாகக் கூறி பிரதமர் சமாதானம் செய்திருக்கலாம். இந்த பரபரப்பான விவகாரங்களின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பது, நாளை அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.
