தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாஜக தேசிய தலைமை மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அண்ணாமலையை கட்சியில் நீடிக்க வைக்க சமரச பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும், அவை தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. டெல்லியில் நடந்த இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகும், அண்ணாமலை தனது தனிப்பட்ட அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலையின் பிறந்த நாளான ஜூன் 4-ஆம் தேதி புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போதைக்கு உடனடியாக அறிவிப்பு வெளியாகாது என்றும், எனினும் புதிய கட்சி தொடங்குவது உறுதி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், கரூரைச் சேர்ந்த ஒருவர் மூலமாக தேர்தல் ஆணையத்தில் புதிய அரசியல் கட்சி பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு “தமிழக மக்கள் கழகம்” அல்லது “தமிழக மக்கள் கட்சி” என்று பெயரிடப்படலாம் என்றும், அதனை அண்ணாமலை தனது அரசியல் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வார் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.
அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து தனது நெருங்கிய ஆதரவாளர்களிடமே இன்னும் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ளாததால், அவரது அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அதேநேரத்தில், அவர் நடத்தி வரும் “வீ தி லீடர்ஸ்” (We The Leaders) என்ற சமூக சேவை அறக்கட்டளையை படிப்படியாக அரசியல் இயக்கமாக மாற்றும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் புதிய கட்சிக்கான சாத்தியமான சின்னங்கள் குறித்து தற்போதே பொதுமக்களிடம் கருத்துக்கணிப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
