மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மும்பையின் மகாலட்சுமி பகுதியிலிருந்து நவி மும்பைக்கு ஊபர் காரில் பயணித்த ஷிவானி, பயணம் முடிந்ததும் செயலி காட்டிய ₹501 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால், ஓட்டுநர் செயலியில் குறிப்பிடப்படாத கூடுதலாக ₹40 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து, ஆத்திரமடைந்த ஓட்டுநர் காரை உள்ளே பூட்ட முயன்றதோடு, காரில் இருந்து இறங்கிச் சென்ற பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று மிரட்டல் விடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தற்காப்பிற்காக ஓட்டுநரைப் பின்னுக்குத் தள்ள முயன்றபோது, அவர் தன்னை அறைந்து, கையை முறுக்கித் தாக்கியதாக ஷிவானி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுப் பகீர் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். அருகில் இருந்த பொதுமக்களும், தகவலறிந்து வந்த அவரது அலுவலக சக ஊழியர்களும் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்த முயன்றபோதும், அந்த ஓட்டுநர் எவ்வித வருத்தமும் இன்றி பிடிவாதமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்த பிறகு, பாதிக்கப்பட்ட தனது சொந்த ஊபர் கணக்கையே நிறுவனம் முடக்கிவிட்டதாக ஷிவானி குற்றம் சாட்டியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வைரலானதைத் தொடர்ந்து, ஊபர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்குத் தான் தங்களின் முதன்மையான முன்னுரிமை என்றும், ஓட்டுநரின் இத்தகைய முறையற்ற நடத்தைக்குத் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, நிறுவனத்தின் கடுமையான விதிகளுக்கு இணங்க சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊபர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
