“தோசை கல்லால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி”… பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்…. நள்ளிரவில் அலறிய திண்டுக்கல்….!

By Nanthini on ஆனி 4, 2026

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக, கணவனை மனைவியே தோசைக்கல்லால் அடித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே உள்ள உடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகராஜ் (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

   

கடந்த சில தினங்களாகவே சுகராஜுக்கும் அவருடைய மனைவி முருகேஸ்வரிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டிலிருந்த இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் முற்றவே, இருவருக்கும் இடையே கடுமையான கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற முருகேஸ்வரி, வீட்டில் இருந்த கனமான தோசைக்கல்லை எடுத்து சுகராஜின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

   

முருகேஸ்வரி தாக்கிய அதிர்ச்சியில், பலத்த காயமடைந்த சுகராஜ் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் இறந்ததை உணர்ந்த முருகேஸ்வரி, உடனடியாக வடமதுரை காவல் நிலையத்திற்கு நேராகச் சென்று, நடந்த விபரங்களைக் கூறி போலீசாரிடம் சரணடைந்தார். கொலை குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் டி.எஸ்.பி பவித்ரா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுகராஜின் உடலைக் கைப்பற்றினர்.

 

பின்னர், சுகராஜின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட தோசைக்கல்லைப் பறிமுதல் செய்த போலீசார், சரணடைந்த முருகேஸ்வரியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியே கணவனைக் கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த இந்த கொடூரச் சம்பவம் உடையாம்பட்டி கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தையும், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.