அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள அந்த ஒரு இடத்திற்கு ஜூன் 18-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது தனிப்பெரும் கட்சியாக விளங்கும் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இந்த இடத்தை எளிதில் வெல்ல முடியும் என்றாலும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சி.வி.சண்முகத்தின் பதவிக்காலம் 2028 ஜூன் வரை இருப்பதால், தற்போது தேர்ந்தெடுக்கப்படும் புதிய எம்.பி-க்கு 2 ஆண்டுகள் மட்டுமே பதவிக்காலம் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராஜ்யசபா சீட்டைப் பெறுவதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் தற்போது இரு முக்கியத் தலைவர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதில் முதலாமவர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவுப் பகுப்பாய்வுத் துறையின் தலைவரும், ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவருமான பிரவீன் சக்கரவர்த்தி ஆவார். தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைவதில் மிக முக்கியப் பங்காற்றிய இவர், முதல்வர் விஜய்யுடன் நல்ல நட்புறவில் உள்ளார். டெல்லி மேலிடத்தின் செல்வாக்கும், தவெக தலைமையின் ஆதரவும் இவருக்கு சாதகமாக இருப்பதால், இந்த ரேஸில் பிரவீன் சக்கரவர்த்தியே முன்னிலையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு அடுத்தபடியாக இந்த ரேஸில் இருப்பவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான செல்வபெருந்தகை ஆவார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்த இவர், விரைவில் தனது மாநிலத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்.எல்.ஏ மற்றும் தலைவர் பதவி என இரண்டையும் இழக்கும் சூழலில் இருப்பதால், தனக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என அவர் விரும்புகிறார். மேலும், தான் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற பின்னணியை முன்வைத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூலம் தனக்கான வாய்ப்பை உறுதி செய்ய அவர் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.
இருப்பினும், இந்த பதவியின் ஆயுட்காலம் வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே என்பதால், டெல்லி அரசியலில் கவனம் செலுத்தும் பிரவீன் சக்கரவர்த்தி இதில் போட்டியிட தயக்கம் காட்டினால் மட்டுமே, அந்த அதிர்ஷ்டம் செல்வபெருந்தகை பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். டெல்லி மேலிடத்தின் செல்வாக்கா அல்லது சமூகப் பின்னணி அடிப்படையிலான அழுத்தமா என்பதில் யாருடைய கை ஓங்கும் என்பதும், தவெக கூட்டணியின் ஆதரவோடு தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குச் செல்லப் போகும் அந்த காங்கிரஸ் பிரமுகர் யார் என்பதும் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
