உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சரண் சிங் என்பவர், தான் புதிதாக வாங்கிய காருக்குப் பெட்ரோல் நிரப்பச் சென்றபோது இந்த வினோதமான மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காரின் எரிபொருள் டேங்கில் ஏற்கனவே 5 லிட்டர் பெட்ரோல் இருந்த நிலையில், டேங்கை முழுமையாக நிரப்புமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் அவர் கூறியுள்ளார். பெட்ரோல் நிரப்பி முடித்த பின் ஊழியர்கள் கொடுத்த ரசீதில் 52 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு சரண் சிங் அதிர்ச்சியடைந்தார்.
காரின் மொத்த கொள்ளளவே (Tank Capacity) 45 லிட்டர் மட்டும்தான் எனும் போது, ஏற்கனவே 5 லிட்டர் இருக்கும் காரில் எப்படி 52 லிட்டர் பெட்ரோல் கொள்ளும் என்று அவர் ஊழியர்களிடம் நியாயமாகக் கேள்வி எழுப்பினார். ஆரம்பத்தில் இயந்திரத்தில் 41 லிட்டர் என்று காட்டிய ஊழியர்கள், பின்னர் ஏதோ தில்லுமுல்லு செய்து கூடுதலாக 11 லிட்டரைச் சேர்த்து 52 லிட்டராக ரசீது தயாரித்து ஏமாற்ற முயன்றது தெரியவந்தது. ஊழியர்கள் தொடர்ந்து மழுப்பியதால், சரண் சிங் சாமர்த்தியமாகத் தனது கார் நிறுவன அதிகாரியைப் பெட்ரோல் பங்கிற்கே வரவழைத்தார்.
அங்கு வந்த கார் நிறுவன அதிகாரி, காரின் தொழில்நுட்ப ஆவணங்களை ஆதாரமாகக் காட்டி, இந்த குறிப்பிட்ட மாடல் காரில் 45 லிட்டருக்கு மேல் ஒரு சொட்டு பெட்ரோல் கூட நிரப்ப சாத்தியமே இல்லை என்பதை அதிரடியாக நிரூபித்தார். கார் நிறுவன அதிகாரியே நேரில் வந்து பங்க் நிர்வாகத்தின் பொய் முகத்தைக் கிழித்ததால் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதனைத் தொடர்ந்து சரண் சிங் அளித்த புகாரின் பேரில், கான்பூர் மாவட்ட நிர்வாகம் அந்த பெட்ரோல் பங்க்கில் அவசர விசாரணை நடத்தி, உடனடியாக அதற்குச் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது.
