தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் இந்த மசோதாக்களை நிறைவேற்ற தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவின் ஆதரவை நாட பாஜக முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தங்களுக்குப் பலத்த எதிர்ப்பைக் காட்டி வரும் திமுகவை, இந்த விவகாரத்தில் தன்பக்கம் இழுப்பதற்கான வியூகங்களை பாஜக தலைமை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆதரவைப் பெறுவதற்காக, மசோதாக்களில் திமுக விரும்பும் சில முக்கிய மாற்றங்களையும், திருத்தங்களையும் சேர்த்துக் கொள்ள பாஜக தயாராக இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்கள் குறைந்துவிடக் கூடாது என்ற கவலைக்கு தீர்வு காணும் வகையில் சில சமரசங்களைச் செய்ய பாஜக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் பாஜக தரப்பு ஏற்கனவே பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பில் இருந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.
