சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று (ஜூன் 1) முதல் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார (Face ID) அடிப்படையிலான வருகைப்பதிவு நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. வழக்கமாக அரசு அலுவலக ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாக எழும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்கள் எத்தனை மணிக்கு வருகின்றனர் மற்றும் யார் யார் தாமதமாக வருகிறார்கள் போன்ற விபரங்களை தங்களது கணினியிலேயே நேரடியாகக் கண்காணித்துத் தெரிந்துகொள்ள முடியும்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச்செயலகம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர், அமைச்சர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 54 துறைகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கான அதிகாரப்பூர்வ பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை ஆகும்; இதில் மதிய உணவு இடைவேளைக்கு அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆட்சியின் போது தலைமைச் செயலகத்தில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதற்கு பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், தற்பொழுது மனிதவள மேலாண்மைத்துறையில் சோதனை முயற்சியாக பயோமெட்ரிக் மற்றும் முகம் கண்டறியும் தொடுதிரை இயந்திரங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திலுள்ள மற்ற அனைத்துத் துறைகளுக்கும் விரைவில் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் மனிதவளத் துறைச் செயலாளர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவின்படி, ஜூன் 1-ஆம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் காலை 10 மணிக்கு முன்னதாகவே பணிக்கு வருவதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஊழியர்களின் வருகையானது பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார முறையிலேயே கணக்கிடப்படும் என்றும், இந்த நடைமுறை தற்பொழுது முழு வீச்சில் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
