பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சகுனா மோர் பகுதியில் உள்ள எச்டிஎப்சி (HDFC) ஏடிஎம் மையத்தில் அதிர்ச்சியூட்டும் மாபெரும் பண மோசடி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்காக அந்த ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் எடுக்க வேண்டிய தொகை மற்றும் ரகசிய குறியீட்டு எண் (PIN) ஆகியவற்றை உள்ளிட்ட போதிலும், ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வராமல் உள்ளேயே சிக்கிக் கொண்டது. இதனால் கடும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த அவர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபோது, அந்த ஏடிஎம் இயந்திரத்தின் மீது ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருந்த உதவி எண்ணை கவனித்துள்ளார்.
வங்கியின் அதிகாரப்பூர்வ உதவி எண் என்று நம்பி, இயந்திரத்தில் எழுதப்பட்டிருந்த அந்த எண்ணிற்கு அவர் அவசர அவசரமாக உதவி கேட்டு அழைத்துள்ளார். ஆனால், மறுமுனையில் பேசிய மர்ம நபர்கள் கொடுத்த வழிகாட்டுதலைப் பின்பற்றிய அடுத்த சில நிமிடங்களிலேயே, அவரது வங்கி கணக்கில் இருந்த ஒட்டுமொத்தப் பணமும் அடியோடு சுருட்டப்பட்டு காணாமல் போனது. தனது வாழ்நாள் சேமிப்பை ஏமாந்த துக்கத்தில் அந்த நபர் ஏடிஎம் மையத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். அங்கிருந்த ஏடிஎம் காவலாளியிடம் விசாரித்தபோது, அந்த மோசடி எண் எப்போது, யாரால் எழுதப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். ஏடிஎம் மையங்களுக்குச் செல்வோர் இதுபோன்ற போலியான எண்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
