கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் தீவிரமடைந்துள்ள சூழலில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காத வேளையில் அவர்கள் தங்களை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் சம்மதித்து ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய் நேராகத் தனது இல்லத்திற்கே வந்து தனக்குத் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதோடு நிறுத்தாமல், தற்போதைய சூழலில் அமைச்சர் பதவிக்காகச் சில கட்சிகள் அலைந்து கொண்டிருப்பதாகக் கூறிய பிரேமலதா, தாங்கள் பதவிகளுக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல என்று முழங்கியதோடு, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
