குஜராத் மாநிலம் காந்திநகரின் குடாசன் பகுதியில் வசித்து வந்த பங்கஜ் பன்சாலி (42) என்ற குடும்பத் தலைவர், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது வேலையை இழந்ததால் அவர் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகத் தெரிகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தனது இந்த செயலால் வீட்டிற்கு வரும் தனது மகள் மான்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, வீட்டின் வெளிக்கதவின் மீது ஒரு எச்சரிக்கைக் குறிப்பை அவர் ஒட்டியுள்ளார். அதில், “மான்வி, வெளியேயே இரு.. உள்ளே அபாயம் உள்ளது, முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள், தண்ணீர் குடிக்க வேண்டாம்” என்று உருக்கமாக எழுதியுள்ளார். தனது உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர் முயன்றுள்ளது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
கடந்த மே 22 முதல் பங்கஜின் மொபைல் போன் அணைக்கப்பட்டதால் சந்தேகமடைந்த உறவினர்கள், மே 27 அன்று வீட்டிற்கு வந்து கதவில் இருந்த கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
