“என் அப்பாவையும் அண்ணனையும் ரிலீஸ் பண்ணுங்க!”.. இறந்த பெண் திடீரென போலீஸ் நிலையத்திற்குள் உயிருடன் வந்த மிராக்கிள்.. போலீஸாருக்கு காத்திருந்த மரண மாஸ் ட்விஸ்ட்..!!

By Muthu Mani on வைகாசி 30, 2026

Spread the love

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைப் பகுதிகளில் காவல் துறையினரின் அலட்சியமான செயல்பாட்டை அம்பலப்படுத்தும் விசித்திரமான சம்பவம் ஒன்று நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மத்தியப் பிரதேசத்தின் காட்கி கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி கல்மேகர் (26) மற்றும் அருண் தாது கல்மேகர் (24) ஆகிய இருவரும் திடீரென மாயமாகினர். இவர்களைத் தேடி வந்த நிலையில், பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்ட அணை அருகே தலை துண்டிக்கப்பட்டு, பாதி எரிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அந்தச் சடலத்தை எவ்வித அறிவியல் பூர்வமான டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்கும் உட்படுத்தாமல், அது காணாமல் போன ஷிவானிதான் என்று அவசரமாக முடிவு செய்த மகாராஷ்டிரா போலீசார், கௌரவக் கொலை செய்ததாகக் கூறி ஷிவானியின் தந்தை மற்றும் அண்ணனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், மத்தியப் பிரதேசத்தின் காக்னார் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், காணாமல் போன ஷிவானி மற்றும் அருண் ஆகிய இருவரும் மகாராஷ்டிராவின் நாசிக் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உயிருடன், பாதுகாப்பாகத் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டதோடு, கைரேகை மற்றும் உறவினர்களின் சாட்சியங்களை வைத்து அவர் நிஜமாகவே ஷிவானிதான் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். இதையடுத்து, தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கவும், தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவும், தன்னை இறந்துவிட்டதாக அறிவித்த மகாராஷ்டிராவின் ஜல்கான்-ஜமோத் காவல் நிலையத்திற்குள் வியாழக்கிழமை ஷிவானி நேரில் நடந்து வந்தார்.

   

இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட பெண் திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்குள் உயிருடன் நடந்து வந்ததைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். “நான் உயிருடன் தான் இருக்கிறேன், தவறே செய்யாத என் தந்தையையும், அண்ணனையும் உடனடியாகச் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்” என்று ஷிவானி கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். முறையான மருத்துவப் பரிசோதனை இன்றி அப்பாவிக் குடும்பத்தினரைக் கொலைக் குற்றவாளிகளாகச் சித்தரித்துக் கைது செய்த மகாராஷ்டிரா காவல் துறையின் செயல்பாட்டிற்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிறையில் இருக்கும் இருவரையும் சட்டப்படி விடுவிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.