பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் பெண் போலீஸ் அதிகாரி (SP) ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் சென்ற பொதுமகன் ஒருவர் இதனைத் தன் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஹெல்மெட் அணியாமல் செல்லும் பெண் அதிகாரியைப் பின் தொடரும் நபர், “என் சகோதரனுக்கு ஹெல்மெட் அணியாததால் 6,000 ரூபாய் அபராதம் விதித்தீர்கள், ஆனால் நீங்கள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை?” என்று இந்தி மொழியில் தைரியமாகக் கேள்வி எழுப்புகிறார். அந்த நபர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி தன் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் அந்த நபரின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். “சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே அதை மீறலாமா?” என்றும், போக்குவரத்து விதிகளின்படி அந்த பெண் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
