விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து (விசிக) அண்மையில் விலகிய பனையூர் பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைத் தொடர்ந்து, மேலும் சில முக்கிய சிறுத்தைகளைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக தீவிரமாக முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தவெக அரசுக்கு விசிக ஆதரவளித்தாலும், திமுகவுடன்தான் தங்களின் கூட்டணி தொடரும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், தவெகவின் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றது திமுகவிற்கு மட்டுமன்றி, விசிகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உட்கட்சி மற்றும் கூட்டணிக் குழப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, விசிகவின் முக்கியப் புள்ளிகளைத் தங்கள் வசம் ஈர்க்கும் ‘ஆபரேஷனில்’ திமுக தற்பொழுது இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் களம் புதிய கூட்டணிகள் மற்றும் ஆட்சி மாற்றங்களால் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், திமுகவின் இந்த அதிரடி நகர்வு விசிக வட்டாரத்திலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
