பெங்களூருவில் 74 வயதான ஓய்வுபெற்ற பெண் ஆசிரியை லட்சுமி ராமமூர்த்தி என்பவரை, இணையவழி குற்றவாளிகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து மிரட்டியுள்ளனர். அவர் ஒரு பெரிய பணமோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி, கடந்த நான்கு மாதங்களாக அவரை ‘டிஜிட்டல் முறையில்’ முடக்கி வைத்துள்ளனர். சட்ட நடவடிக்கை மற்றும் கைதுக்கு அஞ்சி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மோசடிக்காரர்கள் குறிப்பிட்ட கணக்குகளுக்கு 26 முறை தவணைகளாகச் சுமார் ₹24 கோடியை அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனியாக வசித்து வந்ததையும், அவர் சமீபத்தில் நிலம் விற்று பெருமளவு பணம் வைத்திருந்ததையும் சாதகமாக்கிக் கொண்ட குற்றவாளிகள், மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் வீட்டில் இருந்த சுமார் 1.3 கிலோகிராம் தங்க நகைகளை அடமானம் வைக்க அவர் வங்கிக்குச் சென்றுள்ளார். அங்கு அவரது தொடர்ச்சியான பெரிய பணப் பரிவர்த்தனைகளையும், அவரது பதற்றமான நிலையையும் கண்டு சந்தேகமடைந்த வங்கி கிளை மேலாளர் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் பயந்துபோய் பேச மறுத்த அப்பெண், பின்னர் காவல்துறையினரின் வற்புறுத்தலுக்குப் பிறகு நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார்.
வங்கி மேலாளரின் துரிதமான செயலால் இந்த மெகா மோசடி வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 10 வெவ்வேறு வங்கிகளைச் சேர்ந்த 23 கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மற்றும் பீகார் ஆகிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிவஞானம், அக்கச் மல்லிக், பாலக் பாய் படேல், அமித் நரேந்திர படேல், ஓம் பிரகாஷ் ராஜ்புத் மற்றும் கௌரவ் குமார் ஆகிய ஆறு குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பல வங்கிக் கணக்குகளை முடக்கி, இதுவரை ₹4 கோடிக்கும் அதிகமான தொகையை முடக்கியுள்ளதுடன் ₹1.46 கோடியை மீட்டும் சாதனை படைத்துள்ளனர்.
