விசிகவைச் சேர்ந்த பனையூர் பாபு கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய முகமும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸும் விசிகவில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக தனியார் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்ட போதிலும், ஆளூர் ஷாநவாஸ் தரப்பில் இருந்தோ அல்லது அவரிடமிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ மறுப்பும், விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், தற்கால அரசியல் சூழலில் சமூக ஊடகங்கள் (SM) மூலம் மிக எளிதாகத் தனது நிலையை விளக்கியிருக்க முடியும் என்றும், ஆனால் அவர் அதைச் செய்யாமல் மௌனம் காப்பது சந்தேகங்களை வலுப்படுத்துவதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.
ஆளூர் ஷாநவாஸின் இந்தத் தொடர் மௌனம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, விசிகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை நோக்கிக் காரசாரமான கேள்விகளை எழுப்பி, கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். கட்சியின் வளர்ச்சிக்குத் தூணாக இருந்த ஒருவர், இதுபோன்ற இக்கட்டான சூழலில் மௌனம் காப்பது சரியல்ல என்றும், உடனடியாக அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் விசிகவிற்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
