தமிழக அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கூட்டணிக் குழப்பங்களும் வார்த்தை மோதல்களும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தேர்தலில் தி.மு.க கூட்டணி தோல்வியடைந்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், காங்கிரஸ் கட்சி தவெக அரசுடன் கைகோர்த்துள்ளது. விஜய்யின் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டதால் கடும் அதிர்ச்சியடைந்த தி.மு.க, காங்கிரஸை ‘முதுகில் குத்திய துரோகி’ எனச் சாடி வருகிறது.
குறிப்பாக, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நமது முதுகில் சவாரி செய்த காங்கிரஸ், இப்போது முதுகில் குத்திவிட்டது. நம் தொண்டர்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி இவர்களை ஜெயிக்க வைத்தனர். ஆனால் குறைந்தபட்ச நன்றியோ நாகரிகமோ இல்லாத காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் நாம் நம்பக் கூடாது, அருகில் சேர்க்கக் கூடாது” என்று உதயநிதி தனது ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். மேலும், மத்தியில் பா.ஜ.க தொடர்ந்து வெற்றி பெறுவதற்கே காங்கிரஸ்தான் முதன்மைக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
உதயநிதியின் இந்த விமர்சனத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் பாயிண்ட் பாயிண்ட்டாகக் கடும் பதிலடி கொடுத்துள்ளார். தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்ததால், உதயநிதி இப்போது ‘நரிக்கு திராட்சை புளித்தது’ போலப் பேசுகிறார் என்று சாடியுள்ளார். மேலும், தேர்தலில் தி.மு.க தோற்றதற்குக் காங்கிரஸ் மீது பழிபோடுவது ஒரு பொறுப்பற்ற செயல் என்றும், காங்கிரஸ் பெற்ற வெற்றிகள் தி.மு.க-வால் தான் கிடைத்தது என்று கூறுவது முற்றிலும் அபத்தமானது என்றும் அவர் மறுத்துள்ளார்.
காங்கிரஸ் வென்ற 5 தொகுதிகள் எவை என்று விளக்கிய ஆனந்த் சீனிவாசன், கன்னியாகுமரி மாவட்டம் எப்போதும் காங்கிரஸின் கோட்டை என்றும், அங்குள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் சொந்த பலத்தில் வென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். மயிலாடுதுறையில் சிறுபான்மையின மக்களின் ஆதரவாலும், மதுரையின் மேலூரில் பா.ஜ.க-வை மக்கள் விரும்பாததாலும்தான் காங்கிரஸ் வென்றதே தவிர, அங்கு தி.மு.க-வுக்கு செல்வாக்கு இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மதுரையில் போட்டியிட்ட தி.மு.க-வின் இரண்டு அமைச்சர்களே தோற்றுப்போன நிலையில், காங்கிரஸ் வெற்றியை தி.மு.க தங்களுக்குரியதாகக் கொண்டாடுவது நகைப்புக்குரியது என்று கூறி, தி.மு.க-வின் குற்றச்சாட்டுகளை ஆனந்த் சீனிவாசன் முற்றிலுமாகத் தகர்த்துள்ளார்.
