கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இரு குற்றவாளிகள் போக்சோ சட்டத்தின்கீழ் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தச் சம்பவத்தில் புதிய திருப்பமாக சிறுமியின் உடல் அவரது தாயாருக்குத் தெரியாமலேயே அவசர அவசரமாகத் தகனம் செய்யப்பட்டுள்ளதாகப் பரபரப்புப் புகார் எழுந்துள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த சிறுமியின் தாயார், மருத்துவமனையில் உடற்கூராய்வு (Postmortem) முடிந்த பிறகு தனது மகளின் முகத்தைக் கூடத் தன்னிடம் காட்டவில்லை என்று கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மருத்துவமனையின் பின்புற வாயில் வழியாக மகளின் உடலை எடுத்துச் சென்று, தன்னிடம் எந்தவொரு அனுமதியோ அல்லது கையெழுத்தோ பெறாமல், தனக்குத் தெரிவிக்காமலேயே உடலைத் தகனம் செய்துவிட்டதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்களையும் வலுக்கச் செய்துள்ளது.
