பாமகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், போட்டியிட்ட 18 தொகுதிகளில் வெறும் 4 இடங்களில் மட்டுமே பாமக வெற்றி பெற்ற நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளின் தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, தோல்விக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஏற்படுத்திய தாக்கமே மிக முக்கியக் காரணம் என பெரும்பாலான நிர்வாகிகள் ஒருமித்த குரலில் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும், தேர்தலுக்கு முன்பாக தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாமகவுக்கு அழைப்பு வந்த விவரத்தை நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர். அந்த அருமையான வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம் என்ற வருத்தமும் கூட்டத்தில் எதிரொலித்தது. இதனை ஏற்றுக்கொண்ட அன்புமணி ராமதாஸ், பாஜக மற்றும் அதிமுகவின் அரசியல் விருப்பங்கள் குறித்தும், அந்தச் சமயத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுப்பிய சில முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக விளக்கினார். தவெக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை எந்த இடத்தில், எப்படி கைநழுவிப் போனது என்பது பற்றிய உண்மைகளையும் அவர் நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பாமகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. “நாம் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறோம், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நாம் எந்த முடிவும் எடுத்ததில்லை; ஆனால், அதற்கான தகுந்த மரியாதையை பாஜக தலைமை நமக்குத் தரவில்லை” என்று நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். பாமகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தந்திருக்க வேண்டும் என்றும், பலமுறை கோரிக்கை விடுத்தும் அது நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய நிர்வாகிகள், தற்போது வரவிருக்கும் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பாமகவுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதை டெல்லியில் அழுத்தமாக வலியுறுத்த வேண்டும் என அன்புமணியைக் கேட்டுக்கொண்டனர்.
“நீங்கள் (அன்புமணி) மத்திய அமைச்சரானால் மட்டுமே பாமகவை மீண்டும் எழுச்சியோடு வழிநடத்த முடியும்; இல்லையெனில் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள்” என்று நிர்வாகிகள் எச்சரித்தனர். மேலும், திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நேரத்தில் கடுமையாக எதிர்க்க வேண்டுமானால் நமக்கு ஆட்சி அதிகாரம் அவசியம் என்றும், ஒருவேளை தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகாலம் நீடிக்கும் சூழல் உருவானால், வட தமிழகத்தில் விஜய்யின் கட்சியினர் பாமகவின் வாக்கு வங்கியில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி செய்வார்கள் என்றும் கவலை தெரிவித்தனர். நிர்வாகிகளின் இந்த ஒருமித்த கோரிக்கையை ஏற்று, பாமகவுக்கு மத்திய அமைச்சர் பதவியைப் பெற பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
