தமிழகத்தில் திடீர் அதிரடி வேட்டை… 3 நாட்களில் 15,000க்கும் மேற்பட்ட ரௌடிகள் கைது… ஒரே நாளில் கதிகலங்கிய ரௌடிகள்…!

By Nanthini on வைகாசி 24, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரௌடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகக் காவல் துறை தீவிரமான அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, சமூகத்திலிருந்து குற்றச் செயல்களையும் மனமயக்கப் போதைப்பொருட்களையும் முற்றிலும் துடைத்தெறியக் காவல் துறை உறுதி பூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குற்றக் குழுக்களின் செயல்பாடுகளைக் குலைக்கும் நோக்கில் கடந்த மூன்று நாட்களாகத் தீவிர கண்காணிப்பும் சோதனைகளும் நடத்தப்பட்டன.

   

இவ்வதிரடி சோதனையின் பலனாக, கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 15,349 ரௌடிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதில் 12,650 பேர் வரலாற்றுப் பதிவேடு (History Sheeters) ரௌடிகள் என்றும், 2,699 பேர் வரலாற்றுப் பதிவுறா ரௌடிகள் என்றும் காவல் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இவர்களில் சந்தேகத்திற்குரிய 3,246 ரௌடிகள் பிடிக்கப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 844 ரௌடிகள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

   

ரௌடிகள் ஒடுக்குமுறை ஒருபுறமிருக்க, இளைய தலைமுறையைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் வகையிலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 419 போதைப்பொருள் குற்றவாளிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வெளிச்சந்தையில் சுமார் 1.43 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காவல் துறையினரின் இந்த அதிரடி வேட்டையில், மொத்தம் 267.756 கிலோகிராம் எடையுடைய கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் ரௌடிகளின் கூட்டமைப்பை உடைப்பதும், போதைப்பொருள் வலைப்பின்னலைத் தகர்ப்பதும் தமிழ்நாடு காவல் துறையின் தொய்வில்லாத தொடர் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைக் கெடுக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக இனிவரும் நாட்களிலும் இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என காவல் துறை எச்சரித்துள்ளது.