அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், 16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவருடன் சட்டவிரோத உறவு வைத்திருந்த மிஷெல் மெர்கோக்லியானோ (36) என்ற சிறப்புக் கல்வி ஆசிரியைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கொனெஸ்டோகா உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த இவர், அந்த மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டது மட்டுமின்றி, அவருக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களையும் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, அவர் ஏற்கனவே பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை அமைப்புகள் வெளியிட்ட தகவலின்படி, ஆசிரியை மிஷெல் மற்றும் அந்த மாணவர் இருவரும் ஒன்றாக கஞ்சா பயன்படுத்திய பிறகு, ஆசிரியையின் பெற்றோர் வீட்டில் உள்ள படுக்கையறையில் சுமார் 15 முறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஃபீனிக்ஸ்வில்லில் உள்ள ஒரு மருந்தகத்தில் இருந்து அந்த மாணவருக்காக 15 முறை மருத்துவ கஞ்சாவையும் ஆசிரியை வாங்கியுள்ளார். இந்த விபரீத சம்பவங்கள் குறித்து அந்த மாணவர் தனது சகோதரியிடம் கூற, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியை கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது ஆசிரியை தனது குற்றங்களை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, மிஷெலுக்கு குறுகிய கால சிறைத்தண்டனையுடன், ஆறரை ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவர் “இரண்டாம் நிலை பாலியல் குற்றவாளி” எனப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவரது ஆசிரியர் உரிமத்தை ரத்து செய்து, குழந்தைகளுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மீதான நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துள்ள இத்தகைய செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மாவட்ட வழக்கறிஞர் கிறிஸ்டோபர் எல். டி பரேனா-சரோப் தெரிவித்துள்ளார்.
