வேலையிலிருந்து விடுப்பு எடுப்பது என்பது எப்போதும் ஒரு சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, அவசர கால உடல்நலக் குறைவின் போது கூட ஊழியர்களுக்கு எளிதில் விடுப்பு கிடைப்பதில்லை. இந்நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த டெப்லினா என்ற பெண் தனது அலுவலகத்தில் உள்ள ஒரு விசித்திரமான விடுப்பு விதி குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள காணொளி தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்துவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பிய டெப்லினாவிடம், அவரது மேலாளர் ஒரு புதிய விதியைக் கூறியுள்ளார். அதன்படி, உடல்நலக் குறைவு காரணமாக விடுப்பு எடுப்பதாக இருந்தால், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். “நாங்கள் எப்போது நோய்வாய்ப்படப் போகிறோம் என்பது எங்களுக்கு முன்னரே எப்படித் தெரியும்? இந்த விதிக்குப் பின்னால் என்ன தர்க்கம் இருக்கிறது?” என்று அந்தப் பெண் மேலாளரின் விசித்திரமான விதியை எதிர்த்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் நகைச்சுவையாக, “என்னால் எதிர்காலத்தைக் கணிக்க முடிந்தால், நான் ஐபிஎல் (IPL) போட்டிகளின் முடிவுகளைக் கணித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பேன்; அதை விடுத்து இந்த நிறுவனத்தில் ஏன் வேலை செய்யப் போகிறேன்?” என்று கூறியுள்ளார். இந்த காணொளியைப் பார்த்த பல இணையவாசிகள், தங்களது அலுவலகங்களிலும் இதுபோன்ற வினோதமான விதிகளும், மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு முன்பே திட்டமிடுமாறு கூறும் மேலாளர்களும் இருப்பதாகக் கூறி தங்களின் ஆதங்கங்களையும், ஒத்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
