ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூர் வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் கடந்த 16-ஆம் தேதி, கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் மற்றும் மீனவரான சிலம்பரசன் (35) என்பவர் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உடற்கூராய்வு அறிக்கையின்படி, இது திட்டமிட்ட கொலை என்பதை வாலிநோக்கம் மரைன் போலீசார் உறுதி செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, கன்னிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வலிங்கம் என்பவரின் கணவரை இழந்த தங்கையுடன் சிலம்பரசனுக்கு முறையற்ற உறவு இருந்தது தெரியவந்தது.
தன் தங்கையுடனான தொடர்பைக் கைவிடுமாறு செல்வலிங்கம் பலமுறை எச்சரித்தும், சிலம்பரசன் அதனை மறுத்ததோடு அந்தப் பெண்ணைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வலிங்கம், தன் குடும்பக் கௌரவத்தைக் காக்க சிலம்பரசனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக சிலம்பரசனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களான மாரிமுத்து மற்றும் ரமேஷ்கண்ணன் ஆகிய இருவரின் உதவியை அவர் நாடினார்.
திட்டமிட்டபடி கடந்த 15-ஆம் தேதி இரவு, நண்பர்கள் இருவரும் சிலம்பரசனை வெள்ளப்பட்டி கடற்கரைக்கு மது அருந்த அழைத்துச் சென்று, அவருக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்துள்ளனர். அவர் போதையின் உச்சிக்குச் சென்றதும், அங்கு வந்த செல்வலிங்கம் மற்றும் நண்பர்கள் இணைந்து சிலம்பரசனைத் தாக்கிக் கொலை செய்து உடலைக் கடற்கரையில் வீசிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஒரே நாளில் மூன்று இளைஞர்கள் சிறைக்குச் சென்று ஒரு குடும்பமே சிதைந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
