சட்டசபைத் தேர்தலில் திமுக எதிர்பாராத வகையில் அடைந்துள்ள பெரும் தோல்வி, அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில், இம்முறை திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கிகள் கூட பல தொகுதிகளில் சிதறியுள்ளன. கட்சியின் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகிகளுக்கு இடையேயான முரண்பாடுகளும் இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகக் கட்சியை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தோல்விக்கான உண்மைக் காரணங்களை ஆராய்ந்து, கட்சியை மீட்டெடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாகக் களமிறங்கியுள்ளார். இதற்காக அவர் பிரபல தேர்தல் ஆலோசகர் யோகேந்திர யாதவின் குழுவை அணுகி, விரிவான கள ஆய்வை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். லோக்சபா தேர்தலுடன் ஒப்பிட்டு, எந்தெந்த வார்டுகள் மற்றும் கிராமங்களில் திமுகவின் வாக்குகள் சரிந்துள்ளன என்பதைத் துல்லியமாகக் கண்டறிய உதயநிதி ஆர்வம் காட்டி வருகிறார். இக்குழுவினர் மாவட்ட வாரியாகப் பயணித்து முழுமையான அறிக்கையை அவரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகள் எந்த அளவிற்கு தவெக (தமிழக வெற்றிக் கழகம்) உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுக்கு மாறியுள்ளன என்பது குறித்தும், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் மீதான மக்கள் அதிருப்திகள் என்னென்ன என்பது குறித்தும் உதயநிதி அறிக்கை கேட்டுள்ளார். தவெக தரப்பில் ‘ரூட்’ நிறுவனம் மூலமாக இன்ஸ்டாகிராமில் செய்யப்பட்ட டிஜிட்டல் பிரச்சாரம், தேர்தல் களத்தின் கடைசி 10 நாட்களில் திமுகவிற்கு மிகப்பெரிய சேதாரத்தை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு நிறுவனம் மூலமாகத் தமிழ்நாடு முழுவதும் எப்படி இப்படியொரு தாக்கம் ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தற்போதைய இக்கட்டான சூழலில், கட்சியை மீண்டும் பலப்படுத்த கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகிய மூன்று தரப்பும் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் களப்பணிகளில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு இடையே இருந்த முரண்பாடுகளைக் களைவதே இவர்களின் முதன்மை நோக்கமாக உள்ளது. இதனால், தேர்தல் அறிக்கை முழுமையாகக் கிடைத்தவுடன், அடுத்த சில மாதங்களில் கட்சி நிர்வாகப் பொறுப்புகளில் அதிரடியான மாற்றங்களையும், கடுமையான முடிவுகளையும் எடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
