மகாராஷ்டிராவின் யவத்மால் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துல்ஜாபூரில் இருந்து சம்பாஜிநகர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஏறியுள்ளார். பேருந்து பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பெண் திடீரென தனது குழந்தைகளைப் பேருந்திலேயே தவிக்கவிட்டு விட்டுக் கீழே இறங்கி, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். பேருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்ற நிலையில், நீண்ட நேரமாகத் தாயைக் காணாமல் குழந்தைகள் இருவரும் பேருந்துக்குள் கதறி அழுதுள்ளனர்.
குழந்தைகளின் அழுகுரலைக் கேட்டு வந்த நடத்துனர் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்களின் சட்டைப்பையில் ஒரு துண்டுச்சீட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், “நான் என் விருப்பப்படி வாழச் செல்கிறேன். பிள்ளைகளைத் தாத்தாவிடம் ஒப்படைத்து விடுங்கள். எனக்குக் கள்ளக்காதலனுடன் இருக்கவே விருப்பம், அவருடன் உல்லாசமாக ஊர் சுற்றுவதே பிடிக்கும்” என்று எழுதி, பிள்ளைகளின் தாத்தாவின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, நடத்துனர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.
துண்டுச்சீட்டில் இருந்த எண்ணை வைத்துப் போலீசார் குழந்தைகளின் தாத்தாவைப் பீட் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். போலீஸ் நிலையத்திற்கு வந்த தாத்தா, பேரக்குழந்தைகளின் நிலையை கண்டு உருகி அழுவார் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ, “என் மகள் வீட்டில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்” என்று பொருள்களைப் பற்றியே கவலைப்பட்டுக் குமுறினாரே தவிர, பேரக்குழந்தைகளின் நலனில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
