கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் விஜயை விட 2,387 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, மொத்தம் 69,351 வாக்குகளுடன் த்ரில் வெற்றி பெற்றார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிப்பதற்காக பிரேமலதா விஜயகாந்த் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் தொடக்கமாக, இன்று காலை விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், தொகுதி மக்களின் நலனுக்காக சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தொகுதி மேம்பாடு குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேர்தல் களத்தில் இந்த தொகுதி மக்களுக்காக நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் சட்டசபையில் பேசி, தற்போது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து நிச்சயம் நிறைவேற்றுவேன். அதுமட்டுமின்றி, அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களை நேரில் சந்தித்து விருத்தாசலம் தொகுதிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் கேட்டுப் பெறுவேன். சட்டமன்றத்தில் எனது கன்னிப் பேச்சு இன்னும் தொடங்கவில்லை, வெறும் அறிமுகம் மட்டுமே முடிந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும், தனது முதன்மையான இலக்கு குறித்துப் பேசிய அவர், “சட்டமன்றத்தில் தொகுதிக்கான பேச்சு மற்றும் இலாகாக்களுக்கான விவாதம் வரும்போது விருதாசலம் தொகுதிக்காக நான் தீவிரமாகப் பேசுவேன். விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்றுவதுதான் என்னுடைய முதல் கோரிக்கையாக இருக்கும். இதனை தேர்தல் வாக்குறுதியாகவும் தொகுதி மக்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன். எனவே, இதனை சட்டசபையில் உரக்கப் பேசி முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, விருத்தாசலத்தை மாவட்டமாக மாற்ற எல்லா விதத்திலும் தீவிர முயற்சி எடுப்பேன்” என உறுதியளித்தார்.
