பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள ‘தகாஸ் வேலி’ என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆபத்தான நடைபாதை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உள்ளூர் மொழியில் ‘சராபா லாம்’ என்று அழைக்கப்படும் இந்த பாதை, உலகின் மிக ஆபத்தான பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உண்மையில் இது மனிதர்கள் நடப்பதற்காக உருவாக்கப்பட்டது அல்ல; பாறைகளைக் குடைந்து கீழே இருக்கும் கிராமங்களுக்கு பாசன நீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு குறுகிய நீர் கால்வாயாகும்.
இந்த பாதையின் அகலம் வெறும் ஒரு அடி அல்லது அதற்கும் குறைவாகவே உள்ளது. இதன் ஒருபுறம் வானத்தை முட்டும் கூர்மையான பாறைகளும், மறுபுறம் நூற்றுக்கணக்கான அடிகள் ஆழமுள்ள பாதாளமும் அமைந்துள்ளன. எந்தவிதமான பாதுகாப்பு வேலியோ அல்லது பிடிமானமோ இங்கு இல்லை. இப்பாதையில் நடக்கும்போது மேலே இருக்கும் பாறைகளில் தலை மோதும் ஆபத்தும், கால் சற்றே பிசகினாலும் நேரே மரணக் குழியில் விழும் அபாயமும் ஒருசேர இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். காரகோரம் நெடுஞ்சாலையில் தொடங்கி சியாச்சின் பனிப்பாறைக்கு அருகில் உள்ள பகுதி வரை இப்பாதை நீள்கிறது.
https://www.instagram.com/reel/DYUXoZZssVX/?utm_source=ig_web_copy_link
சுற்றிலும் பனி படர்ந்த மலைகளுடன் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இது காட்சியளித்தாலும், இதன் பின்னணியில் பெரும் ஆபத்து ஒளிந்துள்ளது. மிக உயரமான இடத்தில் இருப்பதால் இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் உண்டாவது பொதுவானது. மேலும், இங்கு நொடிக்கு நொடி மாறும் வானிலை, கடுமையான பனிக்காற்று மற்றும் திடீர் நிலச்சரிவுகள் ஆகியவை பயணத்தை மேலும் பயங்கரமாக்குகின்றன. சாகச விரும்பிகளுக்கு இது சொர்க்கமாகத் தெரிந்தாலும், உள்ளூர் வழிகாட்டிகள் இல்லாமல் இங்கு செல்வது தற்கொலைக்குச் சமம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
