செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமி ஒருவனிடம் ஜனார்த்தனன் என்ற வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், சிறுமியின் உடல்நலக்குறைவு மற்றும் ரத்தக்கசிவைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவரிடம் விசாரித்தபோது நடந்த கொடூரத்தை சிறுமி தெரிவித்துள்ளார். இது குறித்து கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த வாலிபரைக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோடை விடுமுறை காலங்களில் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும்போது, வீட்டில் தனியாக விடப்படும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. இச்சம்பவம் சமூகத்தின் பாதுகாப்பற்ற சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள நிலையில், இத்தகைய கொடூரங்களைத் தடுக்க பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகள் தங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் அல்லது பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டால் உடனடியாக 1098 என்ற குழந்தை உதவி மைய எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் நேரங்களில் குழந்தைகளைத் தனியாக விடுவதைத் தவிர்த்து, அவர்கள் நம்பிக்கையான நபர்களின் கண்காணிப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அண்டை வீட்டினர் அல்லது உறவினர்களின் உதவியுடன் குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வைப்பதே இப்போதைய காலத்தின் கட்டாயமாகும். விழிப்புணர்வும், முறையான கண்காணிப்பும் மட்டுமே குழந்தைகளைப் பாதுகாக்கும் அரணாக இருக்க முடியும் என்பது சமூகத்தின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.
