மத்தியக் கிழக்கில் வெடித்துள்ள போர்ச் சூழல் உலகெங்கும் கடுமையான பொருளாதாரக் குழப்பங்களையும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு ரஷ்யா மிகப் பெரிய பொருளாதார லாபத்தை அள்ளி வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான போரின்போது மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளால் ரஷ்யப் பொருளாதாரம் அழியும், அதன் நாணயமான ‘ரூபிள்’ மதிப்பிழக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி அமெரிக்க டாலருக்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரூபிள் மிக வலிமையான நாணயமாக உருவெடுத்துள்ளது.
சர்வதேச ஊடகமான புளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷ்ய ரூபிள் 12% வரை பலமடைந்துள்ளது. தற்போது ஒரு டாலருக்கு நிகரான ரூபிளின் மதிப்பு 72.6 ஆக உயர்ந்து, கடந்த 2023 பிப்ரவரிக்கு பிந்தைய உச்சத்தைத் தொட்டுள்ளது. வளைகுடாப் போரால் உலகின் பிற நாடுகள் திணறி வரும் வேளையில், சந்தை வல்லுநர்களின் கணிப்புகளைத் தகர்த்து ரஷ்யப் பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்து வருவது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அசாத்திய வளர்ச்சிக்கு வளைகுடாப் போரால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி தட்டுபாடே முக்கியக் காரணமாகும். ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால், அமெரிக்கா வேறு வழியின்றி ரஷ்ய எண்ணெய் மீதான கடுமையான கட்டுப்பாடுகளைச் சற்றே தளர்த்தியது. இது ரஷ்யாவுக்குக் கிடைத்த ஜாக்பாட்டாக அமைந்தது. மேலும், மார்ச் மாதத்தில் $44.6 ஆக இருந்த கச்சா எண்ணெய் விலை ஏப்ரலில் $94.9 ஆக உயர்ந்து, தற்போது 100 டாலரைக் கடந்து வர்த்தகமாகிறது. இந்த விலையேற்றத்தால் ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதி நிறுவனங்கள் ஏப்ரலில் மட்டும் தங்களின் வெளிநாட்டு விற்பனையை 3 மடங்கு அதிகரித்து, $7.3 பில்லியன் டாலராக உயர்த்தின. இது ரூபிளின் மதிப்பை வான்முட்டச் செய்துள்ளது.
இதுதவிர, ரஷ்யா வகுத்த மாஸ்டர் பிளான் அதன் நாணயத்தை மேலும் பலப்படுத்தியது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் ரஷ்யா மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களின்படி, அதன் இறக்குமதிப் பொருட்களுக்கான தொகையில் கிட்டத்தட்ட 60% தற்போது நேரடியாக ரூபிள் நாணயத்திலேயே செலுத்தப்படுகிறது. இதனால் டாலருக்கான தேவை குறைந்துள்ளது. அதேபோல, ரஷ்ய மத்திய வங்கியின் அதிக வட்டி விகிதக் கொள்கை காரணமாக, உள்நாட்டில் வெளிநாட்டு நாணயங்களுக்கான தேவை பெருமளவு குறைந்து, ரூபிளின் கை ஓங்கியுள்ளது.
மறுபுறம், கச்சா எண்ணெய் விலை $59-க்கு மேல் போகும்போது கிடைக்கும் உபரி வருவாயைக் கொண்டு, நாட்டின் அவசரக்கால நிதியான ‘தேசிய நல்வாழ்வு நிதிக்காக’ ரஷ்யா இந்த மே மாதத்தில் 110 பில்லியன் ரூபிள்களை ($1.5 பில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளது. இருப்பினும், ரூபிள் அளவுக்கு அதிகமாகப் பலமடைவது அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு டாலர் வருவாயை மாற்றும்போது லாபக் குறைவை ஏற்படுத்தி, சற்றே தலைவலியைத் தந்துள்ளது. ஆனாலும், தற்போதைய சூழலில் பொருளாதாரம் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று ரஷ்ய நிதி அமைச்சர் ஆண்டன் சிலுவானோவ் தெளிவுபடுத்தியுள்ளார்.
