ஈரோடு மேற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ ஆனந்த் மோகன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர், மாவட்டத்தின் குற்ற நடவடிக்கைகள் குறித்த கோப்புகளை (பைல்களை) எடுத்துக்கொண்டு தங்களது முகாம் அலுவலகத்திற்கு உடனடியாக வருமாறு ஒரு போலீஸ் அதிகாரி மூலம் மாவட்ட பெண் எஸ்பி கிரண் ஸ்ருதிக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்தச் செய்தி கேட்டு அதிருப்தியும் கோபமும் அடைந்த எஸ்பி, “எம்எல்ஏவை நாம் ஏன் சந்திக்க வேண்டும், அவருக்கு ஏன் மாவட்ட பைல்களைக் காட்ட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்தார். மக்கள் பிரதிநிதியின் இந்த அதிகார மீறல் சம்பவம் காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்எல்ஏவின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் என்னவென்று தெரியாமல் அவர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்று காவல் துறையினர் எஸ்பியை சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, பெருந்துறை டிஎஸ்பி, எம்எல்ஏவின் தந்தை கலைச்செல்வனை நேரில் சந்தித்து எச்சரித்தார். கலெக்டரும் எஸ்பியும் முறைப்படி புகார் அளித்தால் எம்எல்ஏ பதவியைத் தொடர்வதற்கே சிக்கல் ஏற்படும் என்றும், இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த எச்சரிக்கை குறித்து எம்எல்ஏ ஆனந்த் மோகனுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தன் தவறை உணர்ந்த எம்எல்ஏ ஆனந்த் மோகன், உடனடியாக மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதியை செல்போன் மூலம் தொடர்புகொண்டு தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். அதோடு மட்டுமின்றி, எஸ்பியை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாகப் பேசி, தங்களின் அத்துமீறலுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாக போலீஸ் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இவர் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை, சாலைப் பணிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்து பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
