அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு வலுவான அதிமுகவே தங்களின் தற்போதைய தேவை என்று வலியுறுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவதற்கு முன்பாக, தமக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் வேண்டாம் என்றும், ஒரு சாதாரண உறுப்பினராக மட்டுமாவது இருக்க அனுமதிக்குமாறும் எடப்பாடி பழனிசாமியிடம் கடைசியாக ஒருமுறை கெஞ்சிக் கேட்டதாக அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி ‘முடியவே முடியாது’ என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய சி.வி.சண்முகம், தற்போது அனைவரையும் ஒன்றிணையக் கோரி எடப்பாடி அறிக்கை வெளியிடுவது “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” செய்வது போன்றது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசியபோது, அதனைத் தடுத்துக் கெடுத்ததே எடப்பாடி பழனிசாமிதான் என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேமுதிக மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற கூட்டணிக் கட்சிகளை எடப்பாடி துளியும் மதிக்கவில்லை என்றும், அனைவரையும் அரவணைத்துச் செல்லத் தவறிய இந்தத் தவறான அணுகுமுறையால்தான் அதிமுக தொடர்ந்து தனது வாக்கு சதவீதத்தை இழந்து, தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.
